Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

21 ஆண்டுகள் அரசு பணியாற்றிய போலி வாத்தியார் கைது

ஜனவரி 08, 2021 12:41

கிருஷ்ணகிரி : போலி சான்று கொடுத்து 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்தவர் 3 மாத தலைமறைவுக்கு பின்பு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 52 வயதான  இவர், 10ம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்ச்சிஅடைந்து, ஆசிரியர் பயிற்சி  பெற்றுள்ளதாக சான்றளித்து, 1999ல் ஆசிரியர் பணி பெற்று காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டல்லிபுதுார் அரசு துவக்கப் பள்ளியில் பணியில் இருந்தார். இவர், போலி சான்றிதழ் கொடுத்து  பணி நியமனம் பெற்றதாக 2019ல் குண்டலப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார்.

இதன்படி, கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., முருகன் மற்றும் காவேரிப்பட்டணம், வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், ராஜேந்திரன், 10ம் வகுப்பே தேர்ச்சி  பெறவில்லை என தெரிய வந்தது. மேலும், பணம் கொடுத்து போலியாக, 10ம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ்களை பெற்று, பணியில் சேர்ந்து, 21 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி வந்ததும் தெரிந்தது.

 இது குறித்து, கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி டி.இ.ஓ., கலாவதி, எஸ்.பி., பண்டிகங்காதரிடம் புகார் அளித்தார். புகார் குறித்து தகவல் தெரிந்ததும் ராஜேந்திரன் தலைமறைவானார். 

டி.இ.ஓ.கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு  காவேரிப்பட்டிணம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்த  அவரை காவேரிப்பட்டிணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்